கல்வியை முழுமையாக சந்தைப் படுத்தி சமூக நீதியை சீர்குலைக்கும் உலக வர்த்தக அமைப்பின் நைரோபி உடன்பாட்டிலிருந்து மத்திய அரசு விலக தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்
_______________________________________________
கடந்த ஜனவரி 22 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் விவாதத்தில் பங்கு; கொண்டு நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியிலிருந்து…….
Dr. MH. Jawahirullah MLA
நமது நாட்டின் கல்வித்துறையில் அரசின் பங்கை சீர்குலைக்கக்கூடிய வகையிலே, கென்யா நாட்டின் தலைநகரம் நைரோபியில் கடந்த டிசம்பர் 15 முதல் 18ஆம் தேதி வரை உலக வர்த்தக அமைப்பு உறுப்பு நாடுகளின் 10வது வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கு நமது நாடான இந்தியாவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இது மிகவும், கவலைக்குரிய செய்தியாகும். நைரோபியில் போடப்பட்ட ஒப்பந்தம், கல்வியை ஒரு சந்தைப் பொருளாக மாற்றும். இதனால் அரசு நடத்தும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குத் தரும் மானியம் ரத்து செய்யப்படும். இந்திய நாட்டின் சட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு கல்வி வியாபாரத்தில் முதலீடு செய்யும் இந்திய மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் நலன் காக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படும். இந்திய நீதிமன்றங்கள் இந்த ஒப்பந்தப்படி கல்வி நிறுவனங்கள் மீதான வழக்கை விசாரிக்க இயலாது.
மாணவர்களுக்கு அளிக்கப்படும் அரசின் கல்வி உதவித் தொகைகளும் பாதிக்கப்படும். மாநில அரசின் அதிகாரமும் பறிபோகும். பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர், ஐயா பெரியார் போராடி நிறுவிய சமூக நீதி அடிப்படையிலான அனைத்து சட்டங்களும் பலன் இல்லாமல் போகும் இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய அரசு தெரிவித்த விருப்பங்களை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்று இந்த நேரத்தில் தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.